பெத்தாலிங் ஜெயா,ஜன.5
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்கட்சித் தலைவர்களும், ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரும் ஐக்கிய அரசு சிற்றரசில் நடத்திய துபாய் நகர்வின் ரகசியக்கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மறுத்துள்ளார்.
இது போன்ற கொல்லைப்புற வழியாக நடைபெறும் நகர்வுகளுக்கு நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.
தம்முடைய அரசியல் காலடிசுவட்டில் அல்லது நகர்வில் கொல்லைப்புற வாயிலாக அரசாங்கத்தை அமைப்பதில் கைத்தேர்ந்தவர் பிரதமர் அன்வார் என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார். கொல்லைப்புற வாயிலாக அரசாங்கத்தை அமைப்பதற்கு 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம்தேதி முன்னெடுக்கப்பட்ட நகர்வு, மக்கள் பலருக்கு நினைவு இருக்கலாம் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இதை தவிர அன்றைய சிலாங்கூர் மந்திரி பெசாரை, அப்பதவியிலிருந்து அகற்றி, தமது மனைவியை மந்திரி பெசாராக கொண்டு வருவதற்கு அன்வார் மேற்கொண்ட காஜாங் நகர்வையும் மக்கள் மறந்து இருக்க முடியாது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
இது போன்று கொல்லைப்புற வாயிலாக அரசாங்கத்தை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளை முதலில் தொடக்கி வைத்தவர் யார் என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.