சுங்கை புலோஹ், ஏப்ரல் 24-
சுங்கை புலோஹ், R&R உணவகத்தின் அருகிலுள்ள வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 458.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த வேளையில் மேலும் அறுவர் படுங்காயங்களுக்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்ட 18 வயதுடைய தனியார் கல்லூரி மாணவி தனது இரண்டு சக நண்பர்களுடன் சுங்கை பூலோவிலிருந்து சுபாங்கிற்கு சென்று கொண்டிருக்கும் போது இக்கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.
நேற்று இரவு 8.40 மணியளவில் ஹோண்டா சிட்டி ரக காரில் பயணித்த அம்மாணவி உட்பட மேலும் இருவர், டொயோட்டா வியோஸ் காரை முந்திச் செல்ல முயன்றபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது முதற்கட்ட விசாரனையில் தெரியவந்ததாக ஷாருல்நிஜாம் ஜாபர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஹோண்டா சிட்டி காரை ஓட்டி சென்ற 36 வயது உள்ளூர் ஆடவர் விபத்தை தவிர்க்க முற்பட்ட வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைப் பிரிப்பானில் மோதியதாக அவர் தகவலளித்தார்.
விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உட்பட காயமுற்றவர்கள் அனைவரும் மேற்கட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஷாருல்நிஜாம் ஜாபர் குறிப்பிட்டார்.