இந்தியா, மே 17-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.
கோலிவுட்டில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி படமான இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார்.
கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கங்குவா திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்க உள்ள புறநானூறு போன்ற படங்களில் நடிக்க கமிட் ஆனார் சூர்யா.
![](https://thisaigalnews.com/wp-content/uploads/2024/05/9ujry08ck6mb1.jpg)
ஆனால் அந்த இரண்டு படங்களின் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஆகும் என்பதால், சட்டென கார்த்திக் சுப்புராஜ் உடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கிறார் சூர்யா. இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் நடிகர் சூர்யா படத்திற்கு முதன்முறையாக இசையமைக்க உள்ளார் அவர்.
இந்த நிலையில், சூர்யா 44 படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளாராம். இவர் இதற்கு முன்னர் தமிழில் நடித்த முகமூடி, பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது. இதுவரை கோலிவுட்டில் பிளாப் நாயகியாக வலம் வந்த பூஜா ஹெக்டேவுக்கு சூர்யா 44 திரைப்படம் மாஸ் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் மூலம் நடிகர் சூர்யாவும், பூஜா ஹெக்டேவும் முதன்முறையாக ஜோடி சேர உள்ளனர். சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி அந்தமானில் தொடங்க உள்ளது. அங்கு முதற்கட்ட படப்பிடிப்பை சுமார் 40 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, பின்னர் ஊட்டி மற்றும் இதர பகுதிகளில் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.