சிலாங்கூர், மே 31-
சிலாங்கூர், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும், பெர்சாத்து கட்சியே அங்கு வெற்றி பெறும்.
முன்புபொரு காலத்தில், அம்னோவின் கோட்டையாக திகழ்ந்த அத்தொகுதி, தற்போது, தங்களுக்கு வைப்பு தொகையுடைய தொகுதியாக விளங்குவதாக, பெர்மாடாங் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பெர்சாத்து தஞ்சோங் காராங் தொகுதி இடைக்கால தலைவருமான நூருல் சியாஸ்வானி நோஹ் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சட்டமன்ற தேர்தலில், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் உள்ள பெர்மாடாங் , சுங்கை போரோங் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில், பெரிக்காதான் நசியனால் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆகையால், இடைத்தேர்தல் நடைபெற்றால், தங்கள் வசமுள்ள இரு சட்டமன்ற தொகுதிகளிலிருந்து நிரந்தர வாக்குகள், தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் கிடைக்கும் என நூருல் சியாஸ்வானி கூறினார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-முக்கு ஆதரவை வழங்கியதற்காக தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோ டாக்டர் சுல்காபெரி ஹனாபி, விளக்கம் அளிக்கக்கோரி, பெர்சாத்து கட்சி இரு வாரக்கெடுவுடன் அவருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தது.
இன்றுடன் அந்த காலக்கெடு முடிவடைவதால், அவர் உரிய பதிலளிக்கவில்லை என்றால் பெர்சாத்து கட்சியில் அவரது உறுப்பினர் தகுதி பறிபோகுவதோடு, அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகின்றது.