கிள்ளான், ஜூன் 13-
கிள்ளான் பள்ளத்தாக்கில் 3.5 பில்லியன் வெள்ளி கையூட்டுப் பெற்றிருப்பதாக கூறப்படும் சம்பவ தொடர்பில் 11 சுங்கத்துறை அதிகாரிகள், 6 நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 17 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
இதுவரையில் கையூட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து 4.4 மில்லியன் வெள்ளியை SPRM வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.
மேலும் 28 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 4 யமாஹா XMAX மோட்டார் சைக்கிள்கள், 2 லட்சம் வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள Alphard வாகனம், BMW கார், நகைகள், சொகுசு கடிகாரங்கள் மற்றும் ரொக்கமாக வாங்கப்பட்ட நிலம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இதில் 2 மில்லியன் வெள்ளி மதிப்பீட்டில் மொத்தம் 12 நிறுவனங்கள் மற்றும் தனிநபர் சம்பந்தப்பட்ட கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதுடன் சந்தேகிக்கும் சிண்டிகேட்டுகள் பயன்படுத்தியிருப்பதாக நம்பப்படும் இதர கணக்குகளையும் SPRM தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
மலேசிய சுங்கத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் கைப்பற்றப்பட்ட 19 கொள்கலன்களையும் SPRM ஆய்வு செய்து வருவதுடன் சக்கர நாற்காலிகள், கழிப்பறை இருக்கைகள், ஜவுளி மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்படாத தகவல்களையும் கண்டறியப்பட்டன.
சிண்டிகேட்டின் முக்கிய மூளையாக செயல்பட்டுவருபவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பல்வேறு வெளிநாட்டு ஏஜென்சிகளின் ஒத்துழைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அஹ்மட் குசைரி யஹாயா குறிப்பிட்டார்.