தொழிலாளர்களுக்கான சொக்சோ சமூக பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூன் 26-

இந்நாட்டிலுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த, சமூக பாதுகாப்பு அமைப்பு – சொக்சோவில் நடப்பிலுள்ள பேரிடர் திட்டத்தை அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக, பணி நேரங்களுக்கு அப்பாற்பட்டு நிகழ்கின்ற விபத்துகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த பண்டார் குச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யி லீ வூன் வலியுறுத்தினார்.

நடப்பு திட்டத்தின் படி, பணி நேரத்தின் போது நிகழும் விபத்துகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. பணி நேரத்திற்கு அப்பாற்பட்டோ அல்லது பணியிடங்களுக்கு வெளியில் நிகழும் விபத்துகளோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

உதாரணமாக, கடந்த 2023ஆம் ஆண்டில், உடல் உறுப்பு பாதிப்பு காரணமாக வேலை செய்யும் ஆற்றலை இழந்துள்ள 63 ஆயிரத்து 199 தொழிலாளர்களில், 50 விழுக்காட்டினர் அதாவது 31 ஆயிரம் பேர் சாலை அல்லது வீட்டில் நிகழ்ந்த விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

அதே ஆண்டில் நிகழ்ந்த 82 ஆயிரத்து 876 விபத்துகளில், 68 ஆயிரத்து 220 பேர் மட்டுமே, பணியிட விபத்தின் அடிப்படையில் சொக்சோ இழப்பீட்டை பெற தகுதி பெற்றனர். எஞ்சிய 18 விழுக்காட்டு பேர், அந்த இழப்பீட்டை பெற தகுதி பெறாததை கெல்வின் யி சுட்டிக்காட்டினார்.

நேற்று மக்களவையில் 2024 சொக்சோ சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற போது, அவர் அக்கோரிக்கையை விடுத்தார்.

WATCH OUR LATEST NEWS