ரவுப் , ஜூலை 04-
சீன நாட்டு பிரஜைகள் இருவருக்கு மரணத்தை எற்படுத்தும் அளவிற்கு மிக அபாயகரமாக பேருந்தை செலுத்தியது மற்றும் பேருந்து லைசென்ஸ் கொண்டிருக்காதது ஆகியவற்றுக்கா சுற்றுலா பேருந்து ஓட்டுநர் இன்று ரவுப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச் சாட்டப்பட்டார்.
சிலங்கூர், கிள்ளானைச் சேர்ந்த 32 வயது S. ஆனந்த் குமார் என்ற அந்த பேருந்து ஓட்டுநர் மாஜிஸ்திரேட் சித்தி ஐஸ்யா அஹ்மத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்ப்ட்டது.
ஆனந்த் குமார், கடந்த ஜூன் 29 ஆம் தேதி காலை 10.20 மணியளவில், ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸ், 16.5 ஆவது கிலோ மீட்டரில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சீன நாட்டுப்பிரஜைகளை 58 வயது ஜாங் பிங் மற்றும் 49 வயது வாங் சுஹோங் ஆகிய இருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்ததாக ஆனந்த் குமார் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் ஆனந்த் குமார் குற்றாச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
ஆனந்த் குமார் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாததத்துடன் அவரை 8 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் சித்தி ஐஸ்யா அஹ்மத் அனுமதி அளித்தார்.