அந்த முன்னாள் பல்கலைக்கழக மாணவியின் கைப்பேசி கைப்பற்றப்பட்டது

ஹூலு சிலாங்கூர் , ஜூலை 17-

ஒரு போலீஸ்காரரான தனது காதலனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான 25 வயது நூர் ஃபர்ஹானா கார்த்தினி அப்துல்லா – வின் விவேக கைப்பேசி இன்று பிற்பகல் 12.21 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

சரவா, மீரியைச் சேர்ந்த அந்த முன்னாள் மாணவியின் உடல் கண்டு பிடிக்கப்பட்ட உலு சிலாங்கூர், உலு பெர்ணம், கம்போங் ஸ்ரீ கிளெடாங்- கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தின் கால்வாயில் அந்த கைப்பேசி கைப்பற்றப்பட்டது.

அரச மலேசிய போலீஸ் படையின் தடயவியல் பிரிவைச் சேர்ந்த முக்குளிப்போரின் உதவியுடன் அந்த கைப்பேசி மீட்கப்பட்டது. செம்பனைத் தோட்டத்தின் கால்வாய் நீருக்கு மத்தியில் இன்று காலையில் பாதுகாப்பு வளையத்தை கட்டியப் பின்னர் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இக்கொலைக்கான காரணத்தை கண்டறியவும், நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியப்பொருளாக வகைப்படுத்தவும் 25 வயதுடைய அந்த முன்னாள் பல்கலைக்கழக மாணவியின் விவேக கைப்பேசி மிக முக்கியம் என்று கருதப்படுகிறது.

தஞ்சோங் மாலிமில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த அந்த இளம் பெண், கடந்த திங்கட்கிழமை பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் கொலை தொடர்பில் சிலீம் ரீவர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 26 வயது போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS