தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார் கலைச்செல்வம்

ஜொகூர், ஜூலை 17-

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பரின் 16 வயது மகளை அடித்து, கழுத்து அறுத்து, மிக கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாதுகாவல் அதிகாரி ஒருவர், இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்.

D. கலைச்செல்வன் என்ற 59 வயதுடைய நபருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு பதிலாக 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இத்தண்டனை காலம், அவர் பிடிபட்ட நாளான 2011 ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி துன் தேங்கு மைமுன் துவான் மேட் , / கலைச்செல்வன் புரிந்த குற்றத்தை நிலைநிறுத்தினார்.

கலைச்செல்வன், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுன் 18 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் ஜோகூர்பாரு அருகில் மாசாய், சுங்கை மாசாய் செம்பனைத் தோட்டத்தில் 16 வயது பெண் நூர் ரஹாயு கோமாருடின் என்பவரை சரமாரியாக தாக்கி, கழுத்து அறுத்து கொன்று, சடலத்தை எரியூட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

கலைச்செல்வனுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோகூர்பாரு உயர் நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனையை விதித்தது. அத்தண்டனையை அப்பீல் நீதிமன்றமும், கூட்டரசு நீதிமன்றமும் நிலைநிறுத்தியது.

அத்தீர்ப்பை சீராய்வு செய்வதற்கு சமர்பிக்கப்பட்ட மேல்முறையீட்டில் கலைச் செல்வனுக்கு தூக்குத் தண்டனைக்கு பதிலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS