அமைச்சர்ஃபஹ்மி ஃபாட்சில் ஏமாற்றம்….. அதிருப்தி
கோலாலம்பூர், ஜூலை 17-
இந்து உரிமை ஆர்வலரும், சமூக வலைத் தளத்தில் பிரபலமாக விளங்கியவருமான ஏ.ராஜேஸ்வரி என்ற ஈஷா, உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு அவரை இணைய பகடிவதை செய்து, அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக நம்பப்படும் பெண் ஒருவருக்கு வெறும் 100 வெள்ளி மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது குறித்து தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தனது ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி, மன அமைதியை சீர்குலைத்து, அவமதிப்பு செயலில் ஈடுபட்ட ரவாங், புக்கிட் பெரிந்துங் கோல்ஃப் ரிசார்ட், ஜாலான் செம்பகா 2- ஐ சேர்ந்த 35 வயது பெண் ஷாலினி பெரியசாமிக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வெறும் 100 வெள்ளியை மட்டுமே அபராதமாக விதித்து இருப்பது பலரை அதிர்ச்சியிலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஓர் உயிர் பறிபோகும் அளவிற்கு ராஜேஸ்வரியை கடுமையாக நிந்தித்து காணொளியை வெளியிட்ட சமூக இல்ல பராமாரிப்பாளரான ஷாலினி பெரியசாமி தனக்கு எதிரான குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம், ஷாலினி பெரியசாமிக்கு 100 வெள்ளி அபராம் விதித்தது தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளவாசிகள் பரவலாக தங்கள் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
விலை மதிக்க முடியாத ஒரு மனித உயிரின் விலை வெறும் 100 வெள்ளிதானா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக ஊடக அறிக்கைகளை மேற்கோள்காட்டி பேசிய அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில், சட்டத்துறை அலுவலகத்தினால் சேகரிக்கப்பட்ட ஆதாராங்களை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் இந்த அபராதத் தொகையை விதித்து இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
எனினும் இணைய பகடிவதை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் தண்டனை விதிப்பதற்கு, இணைய பகடிவதையின் வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பகடிவதையின் தன்மைக்கு ஏற்ப அதற்கான தண்டனைகள் அமைவதை உறுதி செய்வதற்கு நடப்பு சட்டம் ஆராயப்படும்.
இணைய பகடிவதை செய்கின்றவர்கள், தொடர்ந்து மற்றவர்களை நிந்திக்கும் காரியங்களில் ஈடுபடுவதற்கு மிக குறைவான அபராதம் ஒரு தடையாக இருக்காது. அதற்கு ஒரு முடிவு கட்ட நடப்பு சட்டம் குறித்து ஆராய வேண்டிய உள்ளது என்று ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.