கோலாலம்பூர், ஜூலை 18-
பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதாக PAC எனப்படும் பொது கணக்குக்குழுவினரால் கண்டுபிடிக்கபட்டு, தற்போது பெரும் சர்ச்சைக்கு இடமாகியுள்ள மனித வள அமைச்சின் / மனித மேம்பாட்டுக் கழகமான HRD Corp. நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாஹுல் ஹமீது ஷேக் தாவூத் தன்னார்வ விடுப்பில் சென்றுள்ளார்.
ஷாஹுல் ஹமீது , இனி HRD Corp. அலுவலகத்திற்கு வர வேண்டியதில்லை. GARDEN LEAVE என்ற முறையில் அவர் தன்னார்வ விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஷாஹுல் ஹமீது தன்னார்வ விடுப்பில் அனுப்பப்பட்டு இருப்பதை மனித வள அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணைக்கு HRD Corp. இலக்காகியுள்ளது.
கடந்த வாரம், அந்த மனித வள மேம்பாட்டு கழகத்திலிருந்து பெட்டி கணக்கில் கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாணைக்கு இடமளிக்கும் வகையில் தாம் தற்காலிகாக விடுப்பு எடுக்க முன்வந்துள்ளதாக ஷாஹுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
HRD Corp.பில் தாம் இல்லாத நிலையில் அதன் செயல்பாடுகள் வழக்கம் போல் இருக்கும் என்று இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஷாஹுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
ஷாஹுல் ஹமீது – டின் விடுப்பு, நாளை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. ஷாஹுல் ஹமீது விடுப்பில் செல்வது குறித்து HRD Corp. நிறுவனத்தின் வாரியத் தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.