கோலாலம்பூர், ஆகஸ்ட் 12-
ஒரு பெண்ணும், அவரின் நண்பர்களும் பந்திங்கில் மோட்டார் சைக்கிளை களவாடியதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியின் உள்ளடக்கம் உண்மையல்ல என்று கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ரித்வான் முகமது நோர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடந்ததாக கூறப்படும் அந்த சம்பவம் குறித்து போலீசார் ஆராய்ந்ததில் அதில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் தாங்கள் சம்பந்தப்படவில்லை என்று கூறி, உள்ளூரைச் சேர்ந்த ஒரு பெண்ணும், மற்றொரு நபரும் கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
சம்பந்தப்பட்ட பெண், தவணைப்பணம் செலுத்தாதவர்களின் மோட்டார் சைக்கிள்களை இழுத்துச் செல்லும் வேலை செய்கிறார். அவருடன் காணப்பட்ட ஆடவர், மோட்டார் சைக்கிளுக்கு சொந்தக்காரர் ஆவர். மோட்டார் சைக்கிளை இழுத்து செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதமே அந்த காணொளியில் காணப்படுவதாக அஹ்மத் ரித்வான் விளக்கம் அளித்தார்.