கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-
முன்னாள் பிரதமரும், முன்னாள் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு உரிய நீதியை
பெற்று தருவதிலிருந்து அம்னோ ஓய்ந்து விடாது என்று அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி சூளுரைத்துள்ளார்.
நஜீப்பின் நலனை பேணுவதில் அம்னோவின் நிலைபாடும், கடப்பாடும் மிக உறுதியானவை என்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் அம்னோவின் 2024 ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாட்டை இன்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அகமட் ஜாஹிட் மேற்கண்டவாறு கூறினார்.
நஜீப்பின் தண்டனை குறைப்பதில் மாமன்னர் பிறப்பித்துள்ள கூடுதல் உத்தரவை நிலைநிறுத்துவதில் அம்னோவின் தலைவர் என்ற முறையில் தாமும், உதவித் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் – லும் தொடுத்துள்ள வழக்கு நடவடிக்கை குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நிலைமை எவ்வாறு இருப்பினும் நஜீப்பின் நலனை பேணுவது தொடர்பில் அம்னோ உறுப்பினர்களும், பேராளர்களும் கொண்டுள்ள அபிராஷைகளை நிறைவேற்றுவதில் அம்னோ தனது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அகமட் ஜுஹிட் திட்டவட்டமாக தெரிவித்தார்.