குளுவாங் , செப்டம்பர் 14-
ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், தனது தொடக்கக்கல்வியை சீனப்பள்ளியில் தொடங்கியவர் என்பதால் வாக்காளர்களை கவர்வதில் அவர் தனித்துவமான சிறப்பைக்கொண்டுள்ளார் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இந்த இடைத் தேர்தலில் குளுவாங் அம்னோ தொகுதியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா – பாரிசான் நேஷனல் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
மஹ்கோட்டா தொகுதியில் மொத்த வாக்காளர்களில் 54 விழுக்காட்டினர் மாலாய்க்காரர்கள் ஆவர். 35 விழுக்காட்டினர் சீனர்கள் என்றும் 8 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் தரவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சையத் ஹுசைன், மலாய்க்கார வாக்காளர்களை கவரும் அதேவேளையில் சீனர்களையும் பெருவாரியாக கவருவார் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.