கிள்ளான்,செப்டம்பர் 26-
சர்ச்சைக்குரிய Global Ikhwan Holdings நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்த சமூக மற்றும் கல்வி மையத்தில் மூன்று மாணவர்களின் நெஞ்சின் மீது கால் முட்டியால் அழுத்தியதுடன், அந்த மாணவர்களை பிரம்பினால் அடித்த குற்றத்திற்காக அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
23 வயது முஹம்மது பாரூர் ரஹீம் ஹிஸாம் என்ற அந்த ஆசிரியர், நீதிபதி நோரிடா அடம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அந்த ஆசிரியர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொள்வதாக மெல்லிய குரலில் கூறினார்.
கடந்த ஜுன் மாதம் கிள்ளான், புக்கிட் ராஜா -வில் உள்ள Global Ikhwan Holdings மையத்தில் 10 வயதுடைய மூன்று சிறார்களை சித்ரவதை செய்து, உடல் ரீதியாக காயப்படுத்தியதாக அந்த ஆசிரியர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை அல்லது 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.