கோலாலம்பூர், செப்டம்பர் 27-
சமூக நல இல்லங்களில் பலத்த துன்புறுத்தலுக்கு ஆளான சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள Global Ikhwan Holdings நிறுவனம் தொடர்பாக அரச மலேசிய போலீஸ் படை மேற்கொண்டு வரும் புலன் விசாரணை, வெளிப்படையாக நடைபெறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார்.
அதேவேளையில் அந்த சமூக நல இல்லங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ள 18 வயதுக்கு குறைவான 524 சிறார்களுக்கு தற்காலிக உறைவிடம் வழங்கப்படும் என்பதுடன் மனோரீதியாகவும், கல்வி அளவிலும் அவர்களுக்கு உரிய பயிற்சிகளும், போதனைகளும் வழங்கப்படும் என்று பிரதமர் விளக்கினார்.
அரச மலேசிய போலீஸ் படை, சமய இலாகா மற்றும் சமூக நல இலாகாவின் விசாரணைகள் முடியும் வரையில் அந்த சிறார்களின் பாதுகாப்பு எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.