கோலாலம்பூர், அக்டோபர் 29-
இந்தியப்பெண் தொழில்முனைவர்களுக்கான அமானா இக்தியார் பெண் திட்டத்திற்கான 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு, இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையாக வழங்கி, முடிக்கப்படும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ R. ரமணன் தெரிவித்தார்.
அனாமா இக்தியாவின் இந்த பெண் ( PENN) திட்டம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் இன்னும் முழுமையாக அந்த நிதி பயன்படுத்தி முடிக்கப்படாமல் 2 கோடியே 80 லட்சம் வெள்ளி மிச்சம் உள்ளது.
எஞ்சிய இந்த நிதியும் இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையாக வழங்கப்பட்டு விடும் என்று துணை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.


கோலாலம்பூர், பங்சாரில் நேற்று பெண் திட்டத்தில் பங்கேற்றுள்ள சிறு வர்த்தகத்துறையைச் சேர்ந்த இந்தியப்பெண்களுக்கு இரண்டாவது முறையாக காசோலைகளை ஒப்படைக்கும் நிகழ்விற்கு தலைமையேற்று பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேததி வரையில் அமானா இக்தியார் மலேசியா தொழில்முனைவோர் திட்டத்தில் இணைந்துள்ள 2 ஆயிரத்து 644 இந்தியப்பெண்களுக்கு மொத்தம் 2 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரம் வெள்ளி வரை வழங்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.


இந்தப் பெண் திட்டத்திற்கு இந்தியப் பெண்களின் ஆதரவு பெருகி வருவதையும் டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக இந்த திட்டத்தில் அதிகமான இந்தியப் பெண்கள் பங்கேற்ற மாநிலமாக பேரா திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பேரா மாநிலத்தில் 818 பேர் பயன்பெற்றுள்ளனர். அதனை தொடர்நது சிலாகூரில் 535 பேரும், பகாங்கில் 292 பேரும் நிதி உதவி பெற்றுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.


இந்த பெண் திட்டத்தில் அதிமான இந்தியப்பெண் தொழில்முனைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று தமது அமைச்சு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.