சுபாங், நவ.20-
ஏழு வாகனங்கள் சம்பந்தபட்ட விபத்தில் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஆடவர் ஒருவர், பெரும் அவதிக்குள்ளானார். இச்சம்பவம் நேற்று இரவு 8.56 மணியளவில் என்.கே.வி.இ. நெடுஞ்சாலையில் சுபாங்கிலிருந்து டாமன்சாராவை நோக்கி செல்லும் 14.4 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான 7 வாகனங்கள் மத்தியில் டோயோட்டோ கம்ரி காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, வெளியே வர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகிய 36 வயது கார் ஓட்டுநரை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை போலீசார் நாடினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த டாமன்சாரா நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்கள், பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தி, அந்த வாகனமோட்டியை மீட்டு, அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.