கோலாலம்பூர், நவ. 21-
கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி, விபத்துக்குள்ளான சம்பவங்கள் தொடர்பில் 149 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த 149 பேரும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 44 ஆவது விதியின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் துறையின் தரவுகள் காட்டுகின்றன என்று சைபுடின் குறிப்பிட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 முதல் 15 ஆண்டு சிறைத்தண்டனை, குறைந்த பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் சைபுடின் விளக்கினார்.