டிச. 23-
சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 ஐ மீறிய தொழில்துறை நிறுவனங்களுக்கு 314 நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது பினாங்கு சுற்றுச்சூழல் துறை. இவை, இந்த ஆண்டு நடத்தப்பட்ட வழக்கமான ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டன என அதன் இயக்குநர் Norazizi Adinan தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளில் பிளாஸ்டிக், இரசாயனம், உலோகங்கள், ரப்பர், உணவு, ஜவுளி, இன்னும் பிற தொழில்களைச் சேர்ந்த 1307 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலும் மாசுபடுத்தும் அபாயம் உள்ள நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக, பல நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டதோடு விசாரணை அறிக்கைகளும் திறக்கப்பட்டுள்ளன.
பல்வேறு அமைப்புகளுடன் பினாங்கு சுற்றுச்சூழல் துறை இணைந்து Op Gempur என்ற சோதனையை நடத்தியது. இதன் மூலம் 250 நிறுவனங்களும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் பல நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டு வழக்குத் தொடர பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
சுற்றுச்சூழல் தரத்தைப் பாதுகாப்பதில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று Norazizi வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த இந்த அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.