அஸ்தானா, டிச. 26-
கஸக்ஸ்தானில் அக்தாவ் அனைத்துலக விமான நிலையத்தின் அருகில் அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதற்கு அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று ஆருடம் கூறப்பட்டு வருகிறது.
எம்பரர் 190 ரகத்திலான அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகத்தில் துவாரம் ஒன்று காணப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளன என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேற்காசிய நாடான முன்னாள் சோவியத் குடியரசின் கஸக்ஸ்தானில் நேற்று புதன்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 67 பேரில் 38 பேர் மாண்டனர்.
ரஷ்யாவின் குரோன்ஸி நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் திசைமாறிக் கஸக்ஸ்தானில் விபத்துக்குள்ளானது.
விமானம் வழக்கமான பாதையை விட்டு ஏன் வெகுதூரம் சென்றது என்பதைப் புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.
மோசமான வானிலையால் விமானம் திசை மாறியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததாக அஸர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியெவ் கூறினார்.