கோலத்திரெங்கானு, டிச. 27
திரெங்கானு மாநிலத்தில் பொது மக்களின் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றத்திற்கு ஆளான முதலாவது கல்வத் குற்றவாளியான 42 வயது நபருக்கு 6 பிரம்படித் தண்டனை , 2 நிமிடத்தில் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
தண்டனை நிறைவேற்றத்தின் போது அந்த கல்வத் குற்றவாளி கத்தி, கதறவில்லை. மாறாக, அமைதியாக காணப்பட்டார்.
திரெங்கானு மாநில ஷரியா சட்டத்திற்கு ஏற்ப தண்டனை நிறைவேற்றத்தின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எந்தவொரு அசம்பாவிதமின்றி இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக போலீஸ் துறை அறிவித்துள்ளது.
இதனை நேரில் பார்ப்பதற்கு பொதுமக்களில் 90 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
தண்டனை நிறைவேற்றத்திற்கு பிறகு அந்த கல்வத் குற்றவாளி சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்கு மாராங் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.