கோலாலம்பூர், டிச. 28-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் ஜனவரி 6 ஆம் தேதி, புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தின் வெளிவளாகத்தில் பாஸ் கட்சி உறுப்பினர்கள் பெரியளவில் திரள்வர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் இன்று அஅறிவித்துள்ளார்.
தம்முடைய எஞ்சிய 6 ஆண்டு சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் பிறப்பித்த கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி, அப்பீல் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படும் என்று தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.
அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி, நஜீப் தொடுத்த வழக்கு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத்தொடர்ந்து, அத்தீர்ப்பை எதிர்த்து நஜீப், அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.. அதன் மீதான விசாரணை வரும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தப் பேரணியை வெற்றி பெறச் செய்யும் வகையில் சிலாங்கூர், கூட்டரசுப்பிரதேசம், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங் ஆகிய மாநிலங்களின் பாஸ் கட்சிப் பொறுப்பாளர்களும், ஆதரவாளர்களும், உயர் மட்டத் தலைவர்களும் பெரியளவில் புத்ராஜெயா நீதித்துறை கட்டத்தின் முன் திரள்வார்கள் என்று தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.