மலேசியா – சீனா இடையிலான ஒத்துழைப்பு புதிய துறைகளில் விரிவுப்படுத்தப்பட வேண்டும் ! அன்வார் இப்ராகிம் வலியுறுத்து

டிச. 30-

மலேசியா – சீனா இடையேயான 50 ஆண்டு கால தூதரக உறவுகளைக் கொண்டாடும் இவ்வேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிப்பாக எரிசக்தி, அறிவியல், பசுமை தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளில் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். சீனா மலேசியாவின் உண்மையான நண்பன் என்று அவர் குறிப்பிட்டார்.

விரிவான பொருளாதார கூட்டமைப்பான RCEP மூலம் மலேசியா – சீனா இடையேயான சந்தை அணுகல் மேம்பட்டுள்ளது. ஷாங்காயில் நடைபெற்ற சீன அனைத்துலக இறக்குமதி கண்காட்சியில் மலேசியா தொடர்ந்து பங்கேற்று வருகிறது. மலேசிய பொருட்களான டுரியான், மங்குஸ்தீன் , செம்பனை போன்றவை சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக டுரியான் பழத்திற்கு சீன சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து சீனாவுக்கு டுரியான் ஏற்றுமதி தற்போது 1 பில்லியன் ரிகிட்டை எட்டியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற அன்வார், தற்போது சீனாவின் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்தால் சந்தையின் அளவு இன்னும் பெரியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மலேசியா – சீனா இடையேயான விசா விலக்கு கொள்கை இரு நாடுகளுக்கிடையேயான பயணத்தை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் அமேசியாவுக்கு சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அக்டோபர் வரை மலேசியாவுக்கு வந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 186 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது மலேசியாவின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கிறது.

சீனாவின் Belt and Road Initiative திட்டத்திற்கு மலேசியா ஆரம்பத்திலிருந்தே ஆதரவு அளித்து வருகிறது. 2013 முதல் இரு நாடுகளுக்கிடையேயான உறவு விரிவான மூலாதார கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக இருதரப்பு வர்த்தகம் 200 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. சீனா 16 ஆண்டுகளாக மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும், மலேசியா ஆசியானில் சீனாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும் திகழ்கிறது.

WATCH OUR LATEST NEWS