சட்டத்துறை அலுவலகத்தின் முடிவை தற்காத்தார் முன்னாள் ஏஜி

கோலாலம்பூர், டிச. 31-


தனது எஞ்சிய சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், மாமன்னர் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று சட்டத்துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை முன்னாள் ஏஜி டான்ஸ்ரீ அபு தாலிப் ஓத்மான், இன்று தற்காத்துப் பேசினார்.

இவ்விவகாரம் நீதிமன்றத்தில் சர்ச்சை செய்வது அல்லது சவால்விடுவதை தவிர்க்கும் நோக்கில் கடந்த சனிக்கிழமை சட்டத்துறை அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று மலேசியாவின் சட்டத்துறை தலைவராக நீண்ட காலம் பணியாற்றிவரான அபு தாலிப் தெரிவித்தார்.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் நிகழக்கூடிய குற்றவியல் வழக்குகளில் தண்டனை விதிப்புக்கு ஆளாகின்றவர்கள் அரச மன்னிப்பு கேட்டு, மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கின்ற அனைத்து விண்ணப்பங்கள் குறித்து மன்னிப்பு வாரியத்திற்கு தலைமையேற்றவர் என்ற முறையில் மாமன்னர் முடிவு செய்யக்கூடிய உச்ச அதிகாரத்தை கொண்டுள்ளார் என்பதை அபு தாலிப் தெளிவுபடுத்தினார்.

மாமன்னரின் அதிகாரத்திற்கும், உரிமைக்கும் உட்பட்ட ஒரு விவகாரத்தை நீதிமன்றத்தில் சர்ச்சை செய்வது முறையாகாது. அதனை தவிர்ப்பதற்காகவே புதிய விண்ணப்பம் செய்யும்படி கூட்டரசு அரசமைப்பு சட்டம் 42 ஆவது விதியின் கீழ் சட்டத்துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டத்துறை அலுவலகம் எடுத்துள்ள முடிவு சரியானதே என்று கடந்த 1980 முதல் 1993 ஆம் ஆண்டு வரை நாட்டின் சட்டத்துறை தலைவராக பொறுப்பேற்று இருந்த அபு தாலிப் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS