ஜன 12
பிரதமர் அன்வார் இப்ராஹிம் மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக ஐக்கிய அரபு சிற்றரசுக்குச் செல்க உள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான இருவழி உறவை மேலும் வலுப்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, தரவு மைய மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என அந்நாட்டுக்கான மலேசியத் தூதர் Tengku Datuk Sirajuzzaman Tengku Mohamed Ariffin தெரிவித்தார்.
இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக மலேசியாவுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுக்கும் இடையே விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீட்டு உறவுகளை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஐக்கிய அரபு சிற்றரசின் முக்கிய வணிகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் மலேசியா ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதை முன்னிட்டு, நிலையான வளர்ச்சி குறித்த கருத்துக்களை இந்தப் பயணத்தின் மூலம் பிரதமர் முன்வைக்கவுள்ளார். ஐக்கிய அரபு சிற்றரசின் துணைத் தலைவரும் பிரதமருமான heikh Mohammed bin Rashid Al Maktoumஇன் அழைப்பின் பேரில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.