பிறை, ஜன.22-
பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா, மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பிறை சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் Dewan Serbaguna Chai Leng Park பலநோக்கு மண்டத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் பொங்கல் விழாவை பிறை சட்டமன்றத் தொகுதியும் பினாங்கு மேம்பாட்டுக்கழகத்தின் இந்து இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தன.
இந்நிகழ்விற்கு பினாங்கு, சமூக நலன் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப்பிரிவு மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் Lim Siew Kim,பினாங்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ராஜேந்திரன், பினாங்கு மேம்பாட்டுக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Datoo Aziz Bin Bakar, செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் பொன்னுதுரை விக்டர்,அழைக்கப்பட்ட பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்தியர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரக்கூறுகளையும் எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற இந்த மாபெரும் பொங்கல் விழாவிற்கு கிராமத்துப் பொங்கல் விழா என கருப்பொருளிடப்பட்டுள்ளது.
மாட்டு வண்டி சவாரி, தாரை தம்பட்டை, உறுமி மேளம் முழக்கம், மேளதாள நாதஸ்வர இசை, கோலாலட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாடட்ம், தமிழர்களின் வீர விளையாட்டான கம்பு சுழற்றுதல், உறியடிப்போட்டி, பொய்க்கால் குதிரையாட்டம் என தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்திய விழாவாக இந்த பொங்கல் விழா களைக்கட்டியது.
பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நிலைநிறுத்தும் அழகான பொங்கல் விழா தனக்கே உரிய அடையாளம் தொலைந்து விடக்கூடாது என்பதற்காக தோட்டப்புறத்தில் எப்படி ஒரு திருவிழா நடக்குமோ, எப்படி ஒரு தைப்பொங்கல் விழா நடக்குமோ அத்தகைய நிகழ்வை மீண்டும் கண்முன்னே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கிராமத்து பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக பிறை சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு விவரித்தார்.
முன்னதாக, தீபாராதனை காட்டி, புதுப்பானையில் பால் ஊற்றி, டத்தோஸ்ரீ சுந்தராஜு பொங்கல் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சிக்குழு உறுப்பினர் Lim Siew Kim, டத்தோ ராஜேந்திரன் மற்றும் வருகை தந்திருந்த பிரமுகர்கள் புதுப்பானையில் பாலை ஊற்றினர்.
பின்னர் ஆண்களும் பெண்களும் பங்கேற்ற 50 புதுப்பானையில் பொங்கலிடும் நிகழ்வு ஏகக்காலத்தில் தொடங்கியது. வருகை புரிந்த பிரமுகர்களுக்கு டத்தோஸ்ரீ சுந்தராஜு தம்பதியர் சால்வை மற்றும் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
நிகழ்விற்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் Lim Siew Kim, / டத்தோஸ்ரீ சுந்தராஜுவுடன் இணைந்து ஒரு சிறு குத்தாட்டத்தை வெளிப்படுத்தியது, உற்சாகம் பொங்க, இந்த கிராமத்து பொங்கல் விழாவிற்கு பெரும் கவனம் ஈர்ப்பாக அமைந்தது.
வருகை புரிந்த அனைவரும் மாட்டு வண்டியில் சவாரி செய்யக்கூடிய நூதன அனுபவத்தையும் இந்த பொங்கல் விழா ஏற்படுத்தியது, பலரை பரவசத்தில் ஆழ்த்தியது.