கெடா, ஜன.23-
முருகப்பெருமானின் உற்சவத் திருநாளான தைப்பூசவிழா நாடு முழுவதும் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றையத் தினம் கெடா மாநிலத்திற்கு சிறப்பு விடுமுறை அங்கீரிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை அங்கீரித்துள்ள மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் சனூசி முகமட் நோர் தலைமையிலான கெடா மாநில அரசுக்கு இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
தைப்பூச விழாவை கொண்டாடும் இந்து பெருமக்களுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில் கெடா மாநிலத்தில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை மேலோங்கச் செய்ய கெடா மாநில ஆட்சிக்குழு எடுத்துள்ள இம்முடியை மஹிமா வரவேற்பதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
கெடா மாநிலத்தில் உள்ள இந்துக்கள் தங்களின் சமய விழாவை தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கான நோக்கத்தை முன்னிறுத்தி கெடா அரசு இந்த சிறப்பு விடுமுறையை வழங்கியுள்ளது.
தைப்பூசம் என்பது இந்துக்களுக்கு ஒரு முக்கிய விழாவாகும். சமூகத்தில் கலாச்சார மற்றும் சமயக்கூறுகளை வலுப்படுத்துவதில் தைப்பூசம் முக்கியப் பங்காற்றுகிறது.
தற்போது சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான், பினாங்கு போன்ற பல மாநிலங்களுக்கு தைப்பூச பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடவுள் மீது நம்பிக்கை வைத்தல் எனும் ருக்குன் நெகாராவின் முதல் கோட்டிபாட்டிற்கு இணங்க கெடா மாநில இந்துக்கள் தங்களின் சமய கடமைகளை நிறைவேற்றுவதற்கு / மாநில அரசு மதிப்பளித்து இருப்பது / பாராட்டத்தக்கதாகும் என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
அதேவேளையில் கெடா மாநிலத்தில் தைப்பூச விடுறை என்பது பல ஆண்டுகளாக இந்துக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தைப்பூச விடுமுறை வழங்கப்பட்டதையும் டத்தோ சிவகுமார் சுட்டிக்காட்டினார்.
எனினும் இந்த தைப்பூச விடுமுறை என்பது கெடா மாநிலத்தில் ஒரு சிறப்பு விடுமுறையாக அல்லாமல் இதர மாநிலங்களைப் போல் ஒரு நிரந்தர பொது விடுமுறையாக அங்கீகரிக்கும்படி டத்தோஸ்ரீ சனூசி நோர் தலைமையிலான கெடா மாநில அரசாங்கத்தை இவ்வேளையில் தாம் கேட்டுக்க்கொள்வதாக டத்தோ சிவகுமார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.