14 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை லிம் குவான் எங்கிற்குச் செலுத்தினார் முகைதீன் யாசின்

கோலாலம்பூர், ஜன.24-

அல்புகாரி அறக்கட்டளை சம்பந்தப்பட்ட அவதூறு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிடம் தோல்விக் கண்ட முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப 14 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை அந்த டிஏபி தலைவருக்கு முழுமையாகச் செலுத்தினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் முகைதீன் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீடு விசாரணை செய்யப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் அந்த 14 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை லிம் குவான் எங்கை பிரதிநிதிக்கும் தங்களின் வழக்கறிஞர் நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக லிம்மின் வழக்கறிஞர் குவாக் ங்கே சியோங் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருந்த லிம் குவான் எங், இஸ்லாமிய தொண்டு நிறுவனமான அல்புகாரி அறக்கட்டளைக்கு வரி விதிக்குமாறு வருமான வரி இலாகாவிற்கு உத்தரவிட்டார் என்று முகைதீன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லிம் குவான் எங் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS