பத்துமலைத் திருத்தலத்தில் மற்றொரு வளர்ச்சித் திட்டம்: நகரும் மின்படிக்கட்டுத் திட்டத்திற்கு அடித்தளமிடப்பட்டது

கோலாலம்பூர், ஜன.25-

நாட்டின் தாய்க்கோவிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் மற்றொரு வளர்ச்சித்திட்டமாக பத்துமலைத்திருத்தலத்தில் நகரும் மின்படிக்கட்டுகள் நிர்மாணிக்கப்படுவதற்கான துவக்க விழா, சிறப்பு பூஜைகளுடன் மிக கோலாகலமாக நடைபெற்றது.

பத்துமலை திருத்தலத்தில் அடிவாரத்திலிருந்து மேற்குகையில் வீற்றிருக்கும் வேலாயுதர் சன்னதிக்கு பக்தர்களும், சுற்றுப்பயணிகளும் செல்வதற்கு ஏதுவாக அடிவாரத்தில் உள்ள முடிக்காணிக்கை மண்டபத்தின் அருகாமையில் இந்த நகரும் மின்படிக்கட்டுத் திட்டற்கு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோடாக்டர் நடராஜா தலைமையில் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் மற்றும் தேவஸ்தானப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் காலை 11.30 மணிக்கும் 12.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் துவக்க விழா நடைபெற்றது.

டான்ஸ்ரீ நடராஜா தமது துணைவியார் புவான் ஸ்ரீ மல்லிகாவுடன் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

மேளதாள நாதஸ்வர இசை முழங்க தேவஸ்தானத்தின் பிரதான குருக்கள் சிவகுமார் பட்டர் மற்றும் ரவிக்குருக்குள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நகரும் மின்படிக்கட்டும் திட்டத்திற்கு அஸ்திவாரமிடப்பட்ட வியூகப் பகுதியில் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ என். சிவகுமார், அடிக்கல்லுக்கு சிமெண்ட் பூசிமெழுகினார்.

இந்நிகழ்வில் திரளாக கலந்து கொண்ட பொது மக்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது

பத்துமலையில் நகரும் மின்படிக்கட்டுத் திட்டம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, காலை மாலை நேர பூஜைகளை தவிர பெரும்பாலான நேரங்களில் சுற்றுப்பயணிகளே அதிமாக வீற்றிருப்பதால் இந்த நகரும் மின்படிக்கட்டு சேவைக்கு நியாயமான கட்டணம் விதிக்கப்படும் என்றார்.

மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், நடக்க முடியாதவர்கள் ஆகியோர் இந்த மின்படிக்கட்டைப் பயன்படுத்துவதற்கு சலுகை வழங்கப்படும் என்று டான்ஸ்ரீ நடராஜா விவரித்தார்.

பத்துமலைத்திருத்தல வளர்ச்சியில் மற்றொரு மைல் கல்லாக அமையவிருக்கும் இந்த நகரும் மின்படிக்கட்டுத்திட்டம், அடுத்த ஆண்டு தைப்பூச விழாவிற்கு முன்னதாக பூர்த்தியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS