கோலாலம்பூர், ஜன.30-
சீனப்புத்தாண்டுக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு, கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையத்தின் முன்புற சாலையில், திரைப்படத்தில் வருவதைப் போல மிக அபாயகரமாக படுவேகத்தில் இரு வாகனங்கள் செலுத்தப்பட்டு, மற்ற வாகனங்களை கண்மூடித்தனமாக மோதித் தள்ளியதில் இருவர் காயமுற்றனர்.
இந்த சம்பவத்தில் Toyota Hilux வாகனமும், Toyota Vios காரும் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த பயங்கரச் சம்பவத்தை அந்த கேளிக்கை மையத்திற்கு வெளியே குழுமியிருந்தவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சாலையோரத்தில் நின்ற வாகனங்களை மோதியதில் இருவர் காயமுற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வாகனம் படுவேகத்தில் செலுத்திய போது, அதனைத் தடுப்பதற்கு பொது மக்கள் ஓடிய போதிலும், அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்துவதில் அவர்கள் தோல்விக் கண்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மஷாரின்மான் கூ மாமூட் உறுதிப்படுத்தினார்.