கந்தன் காவடித் திட்ட பட்டறையை அறிவித்தார் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

கோலாலம்பூர், பிப்.4-

தைப்பூசத் திருவிழாவின் போது பக்தப் பெருமக்கள் இந்து சமய நெறிமுறைகளுக்கேற்ப தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்கும், காவடிகளை ஏந்திச் செல்வதற்கும், ஊர்வலமாக பங்கேற்பதற்கும் இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கந்தன் காவடி பட்டறைத் திட்டத்தை ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இன்று அறிவித்தார்.

நமது நாட்டில் தைப்பூச விழா மிகப்பெரிய சமய விழாக திகழ்ந்து வருகிறது. அதிகமான இளைஞர்களும், யுவதிகளும் பங்கேற்கின்றனர்.

காவடிகளை ஏந்திச்சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் பக்தர்கள், எத்தகைய காவடிகளை ஏந்திச் செல்ல வேண்டும், கடைப்பிடிக்க வேண்டிய விரதம் உட்பட சமய ஒழுக்க நெறிகள் யாவை, காவடி பக்தி நடனங்கள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும், அவற்றின் நுட்பம் என்ன, அவற்றில் பொதிந்துள்ள மகத்துவம், நமது சமய மரபுகள் காக்கப்பட வேண்டிய அவசியத்தை விளக்குவதே இந்த கந்தன் காவடி திட்டத்தின் நோக்கமாகும் என்று துணை அமைச்சர் சரஸ்வதி விளக்கினார்.

ஒற்றுமைத்துறை அமைச்சின் ஆதரவில் மலேசிய இந்து தர்ம மாமன்றம் மற்றும் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் Fine Arts Dance Academy கலை, கலாச்சசார இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கந்தன் காவடித்திட்ட விழிப்புணர்வு பட்டறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் துணை அமைச்சர் சரஸ்வதி தெரிவித்தார்.

கந்தன் காவடித் திட்டத்தின் முதல் கட்டப் பயிற்சி வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கிள்ளான், பண்டமாரானில் ஸ்ரீ சுப்பிரமணியர் தேவஸ்தான மண்படத்தில் நடைபெறுகிறது என்று சரஸ்வதி விவரித்தார்.

இது 50 பேர் பங்கேற்கக்கூடிய முதல் கட்ட பயிற்சியாக இருந்தாலும், அந்த பட்டறை தொடர்பான காணொளி, You Tube வழியாக பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த காணொலியின் பதிவில் விளக்கப்பட்டும் சமயம் சார்ந்த விவரங்களை அனைத்து ஆலயங்களும், நிர்வாகங்களும் தைப்பூச காலத்தில் மட்டுமின்றி, பங்குனி உத்தரம், சித்ரா பெளணர்மி போன்ற இதர சமய விழாக்களிலும் ஒரு வழிகாட்டலாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று துணை அமைச்சர் சரஸ்வதி கூறினார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை மற்றும் ஸ்ரீ இராதாகிருஷ்ணன் Fine Arts Dance Academy கலை, கலாச்சார இயக்கப் பொறுப்பாளர்களான நளினி மற்றும் கவி ஸ்ரீ சுகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS