பத்து மலை, பிப்.5-
வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி பத்துமலைத் திருத்தலம் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் தைப்பூச விழாவையொட்டி பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து வெள்ளி இரதம் பத்துமலைத் திருத்தலத்தை நோக்கி புறப்படும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா அறிவித்துள்ளார்.
முன்னதாக, இரவு 7 மணிக்கு தொடங்கி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பின்னர் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வெள்ளி இரதத்தில் எழுந்தருளி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் வெள்ளி இரத ஊர்வலம் மேள, நாதஸ்வர இசை முழுங்க, பக்தர்கள் புடை சூழ வழக்கமான பாதைகளில் பத்துமலைத் திருத்தலத்தை நோக்கி புறப்படும்.

வெள்ளி இரதம் மறுநாள் பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பத்துமலை திருத்தலத்தை வந்தடையும்.
வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்ததும், அருள்மிகு ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேதரராய் சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி , பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.
மாலை 5.30 மணிக்கு தமது தலைமையில் சேவற்கொடியேற்றப்பட்டு, 2025 ஆம் ஆண்டின் தைப்பூச விழா அதிகாரப்பூர்மாக தொடக்கி வைக்கப்படும்.

இரத ஊர்வலத்தின் போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகமான போலீஸ்காரர்கள் கடமையில் இருப்பர். பக்தர்கள் சமய மரபுகளை கடைப்பிடித்து, கட்டுக்கோப்பாக நடந்து கொள்ளுமாறு டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டார்.
இம்முறை பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்கு மான்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு தேவஸ்தானம் அ ழைப்பு விடுத்ததாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.
எனினும் ஜோகூரில் நடைபெறும் தைப்பூச விழாவில் மாமன்னர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற ஆண்டுகளில் பத்துலைக்கு மாமன்னர் வரக்கூடும் என்று அரண்மனையிலிருந்து தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

அதேவேளையில் தைப்பூச விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் வருகை புரிவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும், இந்த ஆண்டு தைப்பூச விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.