பத்துமலை, பிப்.10-
நாளை கொண்டாடப்படுவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி பத்துமலை திருத்தலம் களைகட்டியது. நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் முருகனின் உற்சவத் திருநாளில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலையில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, சேவற்கொடியேற்றி, 2025 ஆம் ஆண்டு தைப்பூச விழாகைவ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். உடன் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார் மற்றும் தேவஸ்தானப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்னதாக, வெள்ளி இரதம் இரவு 7 மணியளவில் பத்தமலைத்திருத்தலத்தை வந்தடைந்தப் பின்னர் அருள்மிகு ஸ்ரீ முருகப் பெருமான் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேதரராய் , திருவுருவச் சிலை இறக்கப்பட்டு, சிறப்பு ஆராதனையுடன் சுவாமி மண்டபத்தில் கொண்டு செல்லப்பட்ட போது, பெரும் திரளான பக்தர்கள் கைவணங்கி, மலர்கள் தூவி முருப் பெருமானை வழிபட்டனர்.

சேவற்கொடி ஏற்றப்படுவதற்கு முன்னதாக கொடி கம்பத்தில் தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்துமலையில் திரளத் தொடங்கிய நிலையில் அதிகாலை வரையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை காலை 7 மணிக்கு சுவாமி, மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி வலம் வந்து நதிக்கரையில் பக்தர்களுக்கு தீர்த்தோற்சவக்காட்சி அளிப்பார். அதன் பின்னர் தங்க வேல் புறப்பட்டு, மேற்குகை ஸ்ரீ வேலாயுதர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகள் எடுத்து வருவார்கள்.

பத்துமலை தைப்பூச விழாயொட்டி பத்துமலையை நோக்கி புறப்படும் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் மற்றும் KL Rapid-டின் பேருந்து முதலிய போக்குவரத்து சேவைகள், இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.