பத்துமலை, பிப்.11-
தைப்பூச விழாவிற்கு நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
தைப்பூச விழா ஒரு சமய விழாவாக இருந்தாலும் மலேசியாவின் பன்முக கலாச்சார அம்சங்களின் அடிப்படையில் இது ஒரு பெருவிழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுவதால் இதற்கு நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பத்துமலைத்திருத்தலத்திற்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம், தேவஸ்தானம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றாக, தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கக் கோரி, வலியுறுத்தப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, இன்று பத்துமலைத்திருத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் டான்ஸ்ரீ நடராஜா இதனை தெரிவித்தார்.
தேவஸ்தானத்தின் கோரிக்கைக்கு பிரதமர், உரிய பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கையை எடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.
அதேவேளையில் பிரதமரின் பத்துமலை வருகைக்கு பின்னர் அரசாங்கத்திடமிருந்து தேவஸ்தானத்திற்கு 10 லட்சம் ரிங்கிட் மானியம் கிடைத்து இருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா அறிவித்தார்.
இவ்வேளையில் பிரதமருக்கு தேவஸ்தானம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும் என்று டான்ஸ்ரீ நடராஜா நம்பிக்கை தெரிவித்தார்.