பிறை, பிப்.14-
2025 புதிய கல்வியாண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமையில் தொடங்குகிறது. இந்நிலையில் பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கான வவுச்சர்களை அதன் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, வழங்கி, மாணவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
வவுச்சர்களை வழங்கும் இந்நிகழ்வு, நேற்று முன்தினம் புதன்கிழமை பிறை சட்டமன்றத் தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

பிறை சட்டமன்ற தொகுதி மக்கள் பிரதிநிதி என்ற முறையில், சிறார்களுக்கு பள்ளித் தேவைக்கான உபகரணங்களை வாங்குவதற்கான வவுச்சர்களை வழங்கியதன் மூலம் இந்த முன்னெடுப்பானது, பெற்றோரின் நிதி சுமையை குறைக்கும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு நம்பிக்கைத் தெரிவித்தார்.
கல்வி என்பது நாம் அனைவரும் அறிந்தபடி சிறந்த எதிர்காலத்திற்கான திறவுகோலாகும். பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளில் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது வசதி குறைந்த பெற்றோர்களுக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

அதன் அடிப்படையில் MYDIN பேரங்காடியில் சீருடை, புத்தகப்பை, காலணி, காலுறை போன்ற பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தக்கூடிய தலா 150 ரிங்கிட் மதிப்புள்ள 160 வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்கான முன்னெடுப்பை தாம் மேற்கொண்டதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
பிறை சட்டமன்றத் தொகுதியில் 8 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியும், இத்தகைய உதவி தேவைப்படுகின்ற 20 மாணவர்களைப் பரிந்துரை செய்தது. இதற்காக 50 ஆயிரம் ரிங்கிட் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவுவதில் உண்மையிலேயே பெரும் பேராக கருதுவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது உரையில் தெரிவித்தார்.