அந்த குடிநுழைவு அதிகாரி தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

கோலாலம்பூர், பிப்.20-

அந்நிய நாட்டவர்களின் 12 கடப்பிதழ்களை தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் குடிநுழைவு அதிகாரி ஒருவர் பிடிபட்டுள்ள வேளையில் அவர், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

அந்த அதிகாரி வேலை நேரத்தில் சற்று கண் அயர்வில் இருந்த போது, அவரின் இடுப்பில் கடப்பிதழ்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது எதிர்பாராதவிதமாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த குடிநுழைவு அதிகாரி தனது இடுப்பில் அந்நிய நாட்டவருக்கு சொந்தமான 12 கடப்பிதழ்களை வைத்திருந்தார் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வலுத்துள்ளதால் இவ்விவகாரம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்நிய நாட்டவர்கள் நாட்டிற்குள் சோதனையின்றி நுழையவும், வெளியேறவும் விமான நிலையத்தில் செட்டிங் முகப்பிடங்கள் அமைக்கப்பட்டு இருந்தது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகளை ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்தது.

KLIA-வில் குடிநுழைவு அதிகாரிகளின் பலவீனங்களைக் களைவதற்கு பல்வேறு பரிந்துரைகள் ஊழல் தடுப்பு ஆணையம் முன்மொழிந்திருந்த வேளையில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து இருப்பது ஊழல் தடுப்பு ஆணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

WATCH OUR LATEST NEWS