சிக்கல்கள் நிறைந்த தமிழ்ப்பள்ளிகளுக்கு விரைவில் தீர்வு

கோலாலம்பூர், பிப்.20-

சவால்களை எதிர்நோக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் உறுதி கூறியுள்ளார். தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக அமைச்சர் கோபிந் சிங், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

கெடா, பாலிங்கில் கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பகாங், ஜெராம் தோட்டத் தமிழ்பள்ளி, பினாங்கு, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி விவகாரங்கள் பற்றி இந்தக் கூட்டத்தில் கோபிந்த் சிங், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்குடன் கலந்துரையாடினார்.

இந்த மூன்று தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கல்வியமைச்சின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை அமைச்சர் கோபிந்த சிங் திட்டவட்டமாக வலியுறுத்தினார். கல்வியமைச்சோடு இணைந்து இப்பள்ளிகளின் பிரச்சனைகளுக்கு தமது தரப்பு நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் கோபிந்த் சிங் தமதறிக்கையில் கூறினார். வரும் வாரத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரோடு சந்திப்புகள் நடத்தப்படும் என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது சவால்களை எதிர்நோக்கும் மேற்கண்ட தமிழ்ப்பள்ளிகள் சுமூகமான தீர்வை எட்டவும், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விரைவில் சென்றடையவும், தாம் தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் கோபிந்த சிங் உறுதியாகக் கூறினார்.

WATCH OUR LATEST NEWS