கோலாலம்பூர், பிப்.26-
இன்று நாடாளுமன்றத்தில் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா மீதான 2024 ஆம் ஆண்டு சட்ட மசோதா விவாதத்ததின் போது, தமிழ் மற்றும் சீன ஊடகங்களும் வளப்படுத்தப்பட வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN, ராயன் முன்வைத்த பரிந்துரையினால் அவருக்கும் உலு திரெங்கானு பாஸ் எம்.பி. ரோசோல் வாஹிட்டிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் அமளி உருவானது.
தமிழ் ஊடகங்களின் முக்கியத்துவம் குறித்து நாடாளுமன்றத்தில் தாம் வலியுறுத்திய கருத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நகைச்சுவை பொருளாக மாற்றி, நகைப்பதாகக் கூறி, RSN ராயர் கோபம் அடைந்தார்.
டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் ஊடகங்களுக்கு குறிப்பாக தமிழ் மொழியை உள்ளடக்கிய ஊடகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று உலு திரெங்கானு பாஸ் எம்.பி. ரோசோல் வாஹிட்டை நோக்கி ராயர் கேள்வி எழுப்பினார்.
சீனம் மற்றும் தமிழ்மொழி ஊடகங்களின் முக்கியத்துவம் குறித்து தாம் பேசியதை உலு திரெங்கானு எம்.பி. ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறார்? தாம் முன்வைத்த வாதம் நகைச்சுவை அல்ல என்று RSN ராயர் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.
அப்படியென்றால் சீனம் மற்றும் தமிழ் பயன்பாட்டை எதிர்ப்பதுதான் உலு திரெங்கானு எம்.பி., பெர்சத்து, பாஸ், மற்றும் பெரிக்காத்தான் நேஷனலின் நிலைப்பாடா? என்று RSN ராயர் ஆக்ரோஷமாக வினவினார்.
மலாய் மொழி செய்திகளை மட்டுமல்ல. சீன மற்றும் தமிழ் செய்தி தளங்களையும் ஒரே அந்தஸ்தில் பார்க்க வேண்டும் என்று ராயர் வலியுறுத்தினார்.
எனினும் உலு திரெங்கானு எம்.பி.யின் கருத்தின்படி ராயர் முன்வைத்த பரிந்துரையை எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால், மலாய் மொழிக்கு இன்னும் அதிகமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றே தாம் கருத்து தெரிவித்தாக அந்த பாஸ் எம்.பி. விளக்கினார்.