கோலாலம்பூர், பிப்.26-
சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய விதிமீறல்கள் இருந்தால் பெரிய நிறுவனங்கள் உட்பட குற்றம் புரிபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை போக்குவரத்து அமைச்சு மேற்கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாததால் மலேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் உரிமம், அண்மையில் ரத்து செய்யப்பட்டதை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சுட்டிக் காட்டினார்.
ஒரு நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக அல்லது முழுமையாக இரத்து செய்யப்படும்போது, அந்நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் இயங்க முடியாது என்று அந்தோணி லோக் விளக்கினார்.
”அதிக சுமை கொண்ட கனரக வாகனங்கள் மீதான அமலாக்க நடவடிக்கைகள், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளைக் கடுமையாக்குதல், தொழில்துறை நிறுவனங்களிடையே ICOP செயலாக்கத்தை மேம்படுத்துதல் உட்பட சாலைப் பாதுகாப்புத் திட்டங்களை வளப்படுத்துதல் போன்ற வலுவான நடவடிக்கைகளை அமைச்சு தொடரும் என்றார் அவர்.