சிரம்பான், மார்ச்.07-
பெண் ஒருவரை அறைந்து, அவமதிப்பு செய்த குற்றத்திற்காக லோரி ஓட்டுநர் ஒருவருக்கு சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 3,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 5 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் நுருல் சகினா ரொஸ்லி தீர்ப்பு அளித்தார்.
பி. கணபதி என்ற 23 வயதுடைய அந்த ஓட்டுநர், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பலவந்தத்தைப் பயன்படுத்தியதைத் ஒப்புக் கொண்டார்.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் சிரம்பான், ஜாலான் ராசாவில் 28 வயதுடைய பெண்ணுக்கு எதிராக பலவந்தத்தைப் பயன்படுத்தியதாக கணபதி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கணபதி குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.