சமயத்தின் மீது சவாரி வேண்டாம் – பிரதமர் நினைவுறுத்து

பண்டார் பாரு பாங்கி, மார்ச்.07-

தங்களின் சொந்த நலனுக்காகவும் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் சமயத்தின் மீது சவாரி செய்ய வேண்டாம் என்று அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பொது மக்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

தங்களின் அரசியல் லாபத்திற்காக சமய விவகாரங்களை எந்தவொரு தரப்பினரும் ஒரு கருவியாக பயன்படுத்துவதைக் காண தாம் விரும்பவில்லை என்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.

சமய விவகாரம் மீதான சர்ச்சை எழும் போது, அதனைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு, அதன் மூலம் அரசியல் லாபம் தேட முடியுமா? கட்சியை வளர்க்க முடியுமா? என்ற குறுகிய சிந்தனையில் அரசியல் லாபம் தேட முனைய வேண்டாம். காரணம், இது போன்று தீ மூட்டும் வேலைகள், மக்களை அழித்து விடும் என்று டத்தோஸ்ரீ அன்வார் நினைவுறுத்தினார்.

இன்று சிலாங்கூர் பாங்கி, தெராஸ் ஜெர்னாங் பள்ளி வாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

இது புனித நோன்பு மாதமாகும். அந்த உன்னத மாதத்திற்கு மதிப்பளிக்கும்படி அனைத்து தரப்பினரையும் டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

சமயம் தொடர்புடைய எந்தவொரு சர்ச்சை எழுந்தாலும் அதனைச் சட்டத்தின் வாயிலாக தீர்வு காண முயற்சிக்க வேண்டுமே தவிர அதனைத் தங்களின் அரசியல் லாபத்திற்காக ஊதிப் பெருக்க வேண்டாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் நினைவுறுத்தினார்.

மலேசியாவைப் பொறுத்தவரையில் சமயத்தை இழிவாகப் பேசுபவர்கள் அல்லது சமயத்தை ஏளனப்படுத்துகின்றவர்கள் யாராக இருந்தாலும் நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு தண்டிக்கப்படுவர் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS