டிஏபி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட வேண்டாம் – லிம் குவான் எங்கை சம்மதிக்க வைக்க முயற்சி

கோலாலம்பூர், மார்ச்.07-

ஒற்றுமை அரசாங்கத்தில் பிரதான கட்சியாக விளங்கும் டிஏபியின் மத்திய செயற்குழுவிற்கான தேர்தல், நடைபெறுவதற்கு இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ளன.

இந்நிலையில், டிஏபி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள கட்சியின் நடப்புத் தலைவர் லிம் குவான் எங், முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அப்பதவிக்கு மீண்டும் போட்டியிட வேண்டாம் என்று லிம் குவான் எங்கை சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் லிம் குவான் எங்கை சந்தித்ததாக கூறப்படும் டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக், தலைவர் பதவியைத் தற்காக்க மீண்டும் போட்டியிட வேண்டாம் என்று அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

எனினும் டிஏபி தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளும் தனது முயற்சியில் தோல்வியடையும் அபாயம் இருந்த போதிலும், தாம் மீண்டும் போட்டியிடப் போவதாக லிம் குவான் எங் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லிம் குவான் எங்கிற்கும், அந்தோணி லோக்கிற்கும் இடையில் நல்லிணக்க அடிப்படையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

லிம் குவான் எங்கை சம்மதிக்கும் வைக்கும் முதலாவது முயற்சி தோல்விக் கண்ட போதிலும் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டிஏபி தேர்தலுக்கு முன்னதாகவே அந்தோணி லோக், மீண்டும் ஒரு முறை லிம் குவான் எங்கை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS