முகலாயர் காலத்து தங்கப் புதையல் இருப்பதாக வதந்தி: வயல்களைத் தோண்டும் கிராமவாசிகள்

போபால், மார்ச்.08-

முகலாயர் ஆட்சிக்காலத்தில் தங்கம் புதைக்கப்பட்டதாக பாலிவுட் படத்தில் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச கிராமத்தில் நுற்றுக்கணக்கானோர், இரவோடு இரவாக வயல்வெளிகளைத் தோண்டும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

அண்மையில் பாலிவுட் திரைப்படமான ‘சாவா’ திரைக்கு வந்தது. அப்படத்தில் முகலாயர் காலத்து தங்கப் புதையல் இருப்பதாக கூறி, மத்திய பிரதேச மாநிலம் ஆசிர்கர் கோட்டையை காட்டியிருந்தனர். இந்த படத்தில் கூறியிருப்பதை உண்மை என்று நம்பிய கிராமத்தினர், மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசிர்கர் கோட்டை அருகே இரவு பகலாக கிராமத்தில் இருக்கும் பொது இடம், வயல்வெளிகளை எல்லாம் தோண்ட ஆரம்பித்தனர்.

டார்ச் விளக்கு, கடப்பாரை, மண்வெட்டியுடன் கிராம மக்கள், மண் தோண்டுவதும், சலிப்பதுமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளன. தோண்டிய சிலர் தங்க நாணயங்களை எடுத்து விட்டதாகவும், ஊருக்குள் வதந்திகள் பரவியுள்ளன. கிராம மக்கள் தங்கள் வயல்களை தோண்டுவதால் நில உரிமையாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அந்த பகுதியில் தங்கம் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. புவியியலாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த இடத்தை பரிசோதித்து, மண்ணில் தங்கத்தின் எந்த அடையாளமும் இல்லை என உறுதிப்படுத்தினர்.

WATCH OUR LATEST NEWS