டொராண்டோ, மார்ச்.08-
கனடாவில் மனமகிழ் மையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். டொராண்டோவில் ஸ்கார்போரோ என்னும் நகரில் அம்மையம் உள்ளது. அதில் நுழைந்த மர்ம நபர், திடீரென தாம் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் அங்குள்ளோர் சில நொடிகள் குழம்பினர். பின்னர் துப்பாக்கிச் சூடு என்பதை அறிந்து பதறினர். அச்சம்பவத்தில் அம்மையத்தில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் காரில் அங்கு வந்ததும், பின்னர் அதே காரில் அங்கிருந்து தப்பியதும் தெரிய வந்தது. இதையடுத்து, தப்பியோடிய மர்ம நபர் உட்பட மூன்று சந்தேகப் பேர்வழிகளைத் தேடி வருகின்றனர்.