ரெப்பா சட்டமன்றத் தொகுதியை முதல் முறையாகக் கைப்பற்றிய பெருமை வீரப்பனையே சாரும்

சிரம்பான், மார்ச்.13-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பாரிசான் நேஷனலின் வலிமை மிகுந்த கோட்டையான தம்பின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிம்மாஸ், கெமஞ்சே மற்றும் ரெப்பா ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ரெப்பா தொகுதியை ஜசெக சார்பில் முதல் முறையாகக் கைப்பற்றி, வரலாறு படைத்தவர் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம்.

ஜசெக பொதுச் செயலாளரும், நெகிரி செம்பிலான் மாநில தலைவருமான அந்தோணி லோக்கின் ஆசி, அவர் வழங்கிய ஊக்குவிப்பு, தொகுதி மக்களின் ஆதரவு ஆகியவற்றின் மூலமாக முதல் முறையாக கடந்த 2008 ஆம் ஆண்டு ரெப்பா தொகுதியை வென்றதாக வீரப்பன் கூறுகிறார்.

அந்த வெற்றியைத் தொடர்ந்து அத்தொகுதியில் 4 தவணைக் காலம் வீரப்பன் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

2008 மற்றும் 2013 ஆகிய இரண்டு தவணைக் காலம், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரப்பன், 2018 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத்தை முதல் முறையாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றியது மூலம் கடந்த 2018 மற்றும் 2023 ஆகிய இரண்டு பொதுத் தேர்தல் வாயிலாக மாநில ஆளும் கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் ஒரே சமயத்தில் 5 இலாகாக்களுக்கு பொறுப்பேற்றுள்ள முதலாவது இந்திய ஆட்சிக்குழு உறுப்பினராக 50 வயது வீரப்பன் திகழ்கிறார்.

தொழில்முனைவர், மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரம் என ஐந்து இலாகாக்களுக்கு தலைமையேற்று, மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹாருன் மற்றும் ஜசெக.வின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கின் நம்பிக்கையைப் பெற்று மாநில மக்களுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் சேவையாற்றி வருகிறார் வீரப்பன்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஜசெக.வின் உயர் மட்டப் பதவிகளுக்கான மத்தியச் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் தம்மை, பேராளர்கள் வெற்றி பெறச் செய்வது மூலம் மக்களுக்கு மேலும் ஆக்கப்பூர்வமான முறையில் சேவையாற்ற முடியும் என்று வீரப்பன் கூறுகிறார்.

ஜசெக. தேர்தலில் வீரப்பானின் வேட்பாளர் எண், 62 ஆகும். மத்திய செயலவை உறுப்பினராக, பேராளர்கள் தம்மை தேர்வு செய்வது மூலம் மேலும் பலத்துடனும், துடிப்புடன் செயல்படுவதற்கு தமக்கு ஒரு வாய்ப்பாக அமைய முடியும் தொகுதி மக்களால் மக்கள் சேவகன் என்று போற்றப்படும் வீரப்பன் கூறுகிறார்.

WATCH OUR LATEST NEWS