சிரம்பான், மார்ச்.15-
ஒற்றுமை அரசாங்கத்தின் மிகப் பெரிய உறுப்புக் கட்சியான ஜசெக.வில் மத்திய நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வேளையில் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு முதல் முறையாக போட்டியிடும் தமிழ்ப்பற்றாளரான நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியத்தின் வெற்றியை உறுதி செய்யுமாறு கட்சியின் பேராளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜசெக.வின் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதி மக்களின் அபரிமித ஆதரவைப் பெற்று நான்கு பொதுத் தேர்தல்களின் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் வீரப்பன், ஜசெக.வின் மத்திய செயலவையில் ஓர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவாரோனால் மேலும் அதிகாரத்துடன் இந்தியர்கள் நலன் சார்ந்த விவகாரங்களை முன்னெடுக்க இயலும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜசெக.வின் உதவித் தலைவராக விளங்கிய கட்சியின் மூத்தத் தலைவர் எம். குலசேகரன் இம்முறை மத்திய செயலவைக்குப் போட்டியிடவில்லை. இந்நிலையில் கட்சியைப் பிரதிநிதித்து, மாநில அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் ஓர் இந்தியரான வீரப்பனின் கெளரவத்தை நிலைநாட்டுவதற்கு கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகக் கருதப்பட வேண்டும் என்று மூத்தத் தலைவர்கள் வலியுறுத்தியுள்னர்.
அதேவேளையில் பேராளர்களின் அபரிமித ஆதரவு கிடைக்க வேண்டும். ஜசெக.வின் மத்திய செயலவையில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து இருக்க தம்மை தேர்வு செய்யுமாறு பேராளர்களை வீரப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமது வெற்றியை உறுதிச் செய்வதற்கு கடந்த சில தினங்களாக பேராளர்களைச் சந்திப்பதிலும், தொடர்பு கொள்வதிலும் வீரப்பன் முழு வீச்சில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.