GISBH முடக்கப்பட்டது குறித்து துன் மகாதீர் கேள்வி

கோலாலம்பூர், மார்ச்.15-

GISBH எனப்படும் Global Ikhwan Services & Business Holdings நிறுவனத்தை அரசாங்கம் முடக்கியது குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

GISBH மூடப்பட்டது, மலாய்க்கார முஸ்லிம் வணிகங்களை அழிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்று துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.

GISBH நிறுவனத்தின் சமய சிந்தாந்தத்தில் குறைபாடு இருந்தால், அதனை அரசாங்கம் சரி செய்ய வேண்டுமே தவிர முடக்கக்கூடாது. GISBH ஒரு வெற்றிகரமான மலாய்க்கார முஸ்லிம் நிறுவனமாகும். 21 நாடுகளில் 250 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வணிகத்தைக் கொண்டுள்ளதாக துன் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

தாம் பிரதமராக இருந்த போது அல் – அர்க்காம் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டது. வழிதவறிய போதனையைச் செயல்படுத்திய அந்த அமைப்பைத் தாம் மூடவில்லை. மாறாக, அந்த இயக்கத்தில் உள்ளவர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

GISBH நிறுவனம், ஓரினப்புணர்ச்சி பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. இது நம்பும்படியாக உள்ளதா? என்று துன் மகாதீர் கேள்வி எழுப்பினார்.

ஆதரவற்ற இல்லங்களை வழிநடத்துவதாகக் கூறி, சிறார்களை ஓரினப்புணர்ச்சி நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக GISBH நிறுவனத்தை அரசாங்கம் கடந்தாண்டு முடக்கியது.

அதன் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. இது தொடர்பில் வெற்றிகரமான மலாய் முஸ்லிம் நிறுவனம் ஒன்று மூடப்பட்டு விட்டதாகக் கூறி, துன் மகாதீர் இன்று தனது நீலிக் கண்ணீரை சிந்தினார்.

WATCH OUR LATEST NEWS