ஷா ஆலாம், மார்ச்.16-
டிஏபி கட்சி உறுப்பினர்கள் பதவியில் இருக்கும் போது, விருதுகள் அல்லது பட்டங்களைப் பெறுவதைத் தடை செய்யும் கட்சியின் பழைய கொள்கையை மறுபரிசீலனை செய்யும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். இந்த விவகாரம் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்றும், கடந்த 17 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசாங்கங்களில் டிஏபி கட்சியின் பெரிய பங்கைக் கருத்தில் கொண்டு மறு ஆய்வு செய்வது நியாயமானது என்றும் அந்தோணி லோக் கூறினார்.
மாநில ஆட்சியாளர்கள் டிஏபி தலைவர்களுக்குப் பட்டங்களை வழங்க விரும்பும் சூழ்நிலைகளில் தற்போதைய கொள்கை மிகவும் கடுமையானதாக இருக்கலாம் என்று அவர் கூறினார். எடுத்துக் காட்டாக சிலாங்கூரில், ஆட்சிக்குழு உறுப்பினரான ங் சூ லிம்முக்கு ஒரு பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் கட்சியின் விதிகளின்படி, அவர் அந்த விருதை நிராகரிக்க வேண்டும்,” என்று இன்று நடந்த 18வது டிஏபி தேசிய நிலையிலான மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் கூறினார்.
“எங்கள் விதிகள் மிகவும் கடுமையானதாக இருந்தால், நாங்கள் கரடுமுரடாக பார்க்கப்படலாம். எனவே, நாங்கள் கொஞ்சம் தளர்வை அனுமதிக்க வேண்டும்.” என்றார் அவர். கடந்த 2018 இல், மத்திய உயர்மட்டக் குழு – CEC ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அனைத்து பிரதிநிதிகளுக்கும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துப்பூர்வ ஆலோசனையை டிஏபி வழங்கியது, அவர்கள் அரசியலில் சேவை செய்யும் போது விருதுகளையும் பட்டங்களையும் ஏற்க வேண்டாம் என்று வலியுறுத்தியது.