புத்ராஜெயா, மார்ச்.18-
லஞ்ச ஊழல் மற்றம் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட விசாரணையுடன் தொடர்புடைய எந்தவொரு தகவலையும் மிகத் துல்லியமாக விசாரணை செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுதி பூண்டுள்ளது.
ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்கக்கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டது விவகாரத்துடன் இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணையை எஸ்பிஆர்எம் நிறுத்தி விடாது. மாறாக, அந்த முன்னாள் பிரதமர் தொடர்புடைய எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அதனை ஆராய்வதற்கு எஸ்பிஆர்எம் தயாராக இருப்பதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இஸ்மாயில் சப்ரியுடன் இதுவரையில் நடைபெற்று வரும் விசாரணை, சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. அதேவேளையில் புதிய சிக்கல்கள் எழுந்தால், அது தற்போதைய விசாரணையையொட்டிய தகவல்கள் கிடைக்கப் பெறுமானால், பூர்வாங்க விசாரணையும், புதிய தகவல்களும் ஆராயப்படும் என்று அஸாம் பாக்கி உறுதி கூறினார்.
இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான எஸ்பிஆர்எம் விசாரணை ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. ஆனால், பல விஷயங்களில் முழுமையான பதிலை எதிர்பார்க்க வேண்டியிருப்பதால் அவருக்கு எதிரான விசாரணை தொடரும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.